வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2019 (15:47 IST)

அமைச்சர் மாபா பாண்டியராஜன் வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்பு – டிவிட்டரில் பாரதி பாட்டு !

ஸ்டாலின் தனது தவறான செய்கைகள் காரணமாகவே மிசா காலத்தில் சிறைக்கு சென்றார் என சொல்லிய அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மிசா வழக்கில் சிறை செல்லவில்லை வேறு ஒரு வழக்கில்தான் சிறை சென்றார் எனப் பேசியதை அடுத்து அது சம்மந்தமான விவாதங்கள் எழுந்தன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், "ஸ்டாலின் மிசாவில் சிறை செல்லவில்லை. மிசா காலத்தில் சிறை சென்றார். அவர் ஜனநாயகத்துக்கு குரல் கொடுத்ததற்காக அடிவாங்கவில்லை. தனது தவறான செய்கைகளுக்காகவே அடிவாங்கினார்" என தெரிவித்தார்.

இதனால் திமுகவினர் அமைச்சருக்கு எதிராக உருவ பொம்மை எரிப்பு, கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல் வெளியானது. இதனால் அவரது வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திமுகவினர் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக மாபா ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம். முதல் முறை என் வீட்டுக்கு எதிரில் என் உருவத்திற்கு பாடை கட்டி இழுத்து தீக்கிரையாக்கியதைக் கண்டேன்” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.