1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2020 (13:36 IST)

ஊரடங்கால் ஊரை காலி பண்ணும் மக்கள்! – சுங்கச்சாவடியில் அலைமோதும் கூட்டம்!

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளான சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்த உள்ள நிலையில் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இருந்தாலும், தலைநகரான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள வெளிமாவட்டத்தினர் மூட்டை, முடிச்சுகளுடன் வெளியேற தொடங்கியுள்ளனர்.

இதனால் செங்கல்பட்டு பரனூர் சுங்க சாவடியில் மக்கள் போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஆனாலும் போலீசார் தீவிர சோதனைகளுக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இ-பாஸ் இல்லாதவர்கள் திரும்ப அனுப்பப்படுகின்றனர். அனுமதியில்லாமல் சென்ற 402 இரு சக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள், 2 கார்கள் நேற்று ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.