1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2020 (12:09 IST)

அம்மா உணவகங்களில் கட்டணமில்லா உணவு வழங்குங்கள்! – அரசுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!

தமிழகத்தில் அதிகம் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தலைநகரான சென்னை மற்றும் அதன் அருகே உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் ஜூன் 19 முதல் 30 வரை இந்த பகுதிகளில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ” மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் கட்டணம் ஏதுமின்றி உணவு வழங்க வேண்டும்.” என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் “ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் ஜூன் 30 ஆம் தேதி வரையிலும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதைத் தொடர்ந்தால்தான் வேலையிழப்பால் பாதிக்கப்பட்டிருக்கிற தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும்” என்று கூறியுள்ளார்.