வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (22:48 IST)

நோயாளிகள் எச்சரிக்கை! ஒரே மாதத்தில் 18 போலி மருத்துவர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 18 போலி மருத்துவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், 500-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 

 
திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவிய மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். திருத்தணியை அடுத்த காவேரிராஜபுரம் மற்றும் ஆதிஆந்திரவாடா கிராமங்களில் முதன் முதலாக 4 சிறுவர்கள் மர்மக் காய்ச்சலால் இறந்தனர்.
 
25 மருத்துவக் குழுக்கள் மற்றும் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் பாதித்த கிராமங்கள் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் வீடு வீடாக சென்று சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 8, 9ஆம் வகுப்பு படித்தவர்கள் எம்.பி.பி.எஸ். டாக்டர் போல ஊசி, மருந்து - மாத்திரை வழங்கியதால் காய்ச்சலின் தன்மை முற்றி உயிர் இழந்துள்ளனர்.
 
காய்ச்சலுக்கு அடுத்தடுத்து சிறுவர்கள் பலியானதை தொடர்ந்து போலி மருத்துவர்கள் பலர் ஓட்டம் பிடித்தனர். பொன்னேரி, பூந்தமல்லி, புழல், மீஞ்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்பட்டு வந்த போலி டாக்டர்கள் கிளினிக்குகளை மூடி விட்டு ஓட்டம் பிடித்தனர்.
 
போலி மருத்துவர்களை பிடிக்க போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரையில் 26 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வேட்டை நடைபெற்று வருகிறது.
 
திருவள்ளூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் இது போன்ற தவறான சிகிச்சையை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.