1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (13:39 IST)

பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு :திமுக விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: அண்ணாமலை

திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து வருவது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முரசொலி நிலம் தொடர்பான வழக்கில்  பட்டியலினத்தோர் ஆணையம் புதிதாக  நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க, சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த  நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

‘’திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. பல தளங்களில் கேள்வி எழுப்பியும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து வருவது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

இது குறித்து தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்கக் கோரி, கடந்த 2019 ஆம் ஆண்டு,  பிஜேபி மாநிலப் பொதுச் செயலாளர் திரு  ராம ஸ்ரீனிவாசன்  அவர்கள் முதல் புகார்தாரராகவும், பாஜக   மாநில பட்டியல் அணித் தலைவர் திரு தடா. பெரியசாமி  அவர்கள் இரண்டாம் புகார்தாரராகவும் தொடர்ந்த வழக்கில், பட்டியலின ஆணையம் விசாரிக்கத் தடை கோரி திமுக தொடர்ந்த மனு, இன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, புதியதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையைத் தொடங்க வேண்டும் என்ற தீர்ப்பு வந்துள்ளது.

திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார்.
\