1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 ஜூன் 2020 (11:58 IST)

சாத்தான்குளத்தில் மேலும் ஒரு கைதி மருத்துவமனையில் அனுமதி: பெரும் பரபரப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பின்னரும் கடை திறந்து வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் 
 
இந்த விசாரணையின் போது இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் சாத்தான்குளத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து வியாபாரிகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு உதவி ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் உயிரிழந்த தந்தை மகன் ஆகியோர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியும் அரசு பணியும் வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்
 
இந்த நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் ஆகிய இருவரும் மர்மமான முறையில் மரணமடைந்ததன் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தற்போது மேலும் ஒரு கைதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ராஜா சிங் என்ற விசாரணைக்கைதி கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
கோவில்பட்டியில் விசாரணை கைதிகளாக இருந்த தந்தை மகன் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் தந்தை மகன் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என தமிழக வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது