1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 மார்ச் 2022 (10:26 IST)

சசிக்கலாதான் எனக்கு பொதுச்செயலாளர்..! – ஓ.ராஜா பதிலால் அதிர்ச்சியில் அதிமுக!

நேற்று சசிக்கலாவை நேரில் சந்தித்த ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா தனக்கு சசிக்கலாதான் பொதுசெயலாளர் என பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வரும் நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என சிலர் அவ்வபோது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சிக்கு இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேனி அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டபோது பலரும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

நேற்று ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா, சசிக்கலாவை நேரில் சென்று சந்தித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன்னை கட்சியை விட்டு நீக்கியது குறித்து பேசியுள்ள ஓ.ராஜா “கட்சியில் இருந்து நிர்வாகிகளை தொடர்ந்து நீக்கம் செய்வது நல்லதல்ல. எனக்கு பொதுச்செயலாளர் சசிகலாதான். என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது” என்று கூறியுள்ளார்.

மேலும், தற்போது அதிமுகவில் கோஷ்டிகளாக உள்ளதாகவும் ஒருவரை எதிர்த்து ஒருவர் பேட்டி மட்டுமே கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.