வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (12:41 IST)

பச்சமுத்து கைது செய்யப்படுவாரா? - வேந்தர் மூவிஸ் மதன் வழக்கில் பரபரப்பு

இரண்டு வாரங்களில் வேந்தர் மூவிஸ் மதனை கைது செய்து விடுவோம் என்றும், தேவைப்பட்டால் பச்சமுத்துவை கைது செய்ய தயக்கம் ஏதுமில்லை என்று வழக்கறிஞர் ராஜரத்தினம் கூறியுள்ளார்.
 

 
சென்னையில், எஸ்ஆர்எம் கல்லூரி நிர்வாகத்திற்கும், வேந்தர் மூவிஸ் மதன் இடையே மருத்துவப்படிப்பு தொடர்பாக பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு எழுந்தது.
 
இதனையடுத்து, கடந்த மாதம் 27 ஆம் தேதி, கங்கையில் சமாதி ஆகப்போவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வேந்தர் மூவிஸ் மதன் மாயமானார்.
 
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித் தருவதாகவும், மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித் தருவதாகவும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 55 புகார் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
 
இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டில் மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை கண்டிபிடிக்க உத்தரவிட்டது.
 
கடிதத்தில் மாணவர்களின் பணத்தை எஸ்.ஆர்.எம். கல்லூரி நிர்வாகிகளிடம் கொடுத்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மதன் மாயமானதை அடுத்து மாணவர்கள் பச்சமுத்து வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 
இந்நிலையில், நடப்பாண்டு 109 மாணவர்கள் மதனை சந்தித்து எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சேர பணம் தந்தனர். 109 மாணவர்களும் மதனிடம் தந்த தொகை 70 கோடி ரூபாய் என் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த 109 மாணவர்களும் பணத்தை மீட்டுத்தரக்கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். 109 பேரில் 14 மாணவர்கள் மட்டும் பணத்தை மீட்க உயர்நீதிமன்றத்தை அனுகியுள்ளனர்.
 
வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவானதை அடுத்து, அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், அவரது தாயார் ஆர்.எஸ்.தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த நிலையில், இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனிப்படை அதிகாரிகள், தங்களது புலன் விசாரணை குறித்து அறிக்கையை தாக்கல் செய்தனர்.
 
இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், தனிப்படை போலீசார் நடத்தும் விசாரணைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ’மனு தாக்கல் செய்யப்பட்டு 70 நாட்கள் ஆகியும், விசாரணையில் முன்னேற்றம் இல்லை. வழக்கை தமிழக போலீசாரால் திறம்பட விசாரிக்க முடியவில்லை என்றால், வழக்கை வேறு ஒரு புலன் விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.
 
மேலும், ’இதுவரை நடந்துள்ள விசாரணையின் விவரங்களை கொண்ட நிலை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அதில் காவல் துறையினர் சரிவர இந்த வழக்கை விசாரிக்க வில்லை என தெரியவந்தால், வழக்கை வேறு புலன்விசாரணை அமைப்புக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று நீதிபதிகள் கூறினார்கள்.
 
மாணவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆஜராகி வாதாடுகையில், ‘’எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் மாணவர்களை சேர்க்கும் ஏஜெண்ட்டாக இருந்தார் மதன். எஸ்..ஆர்.எம். கல்லூரியில் சேர வேண்டுமெனில் மதனிடம் பணத்தை தரச்சொன்னார் பச்சமுத்து.
 
அவர் கொடுத்த உத்தரவாதத்தை நம்பி மாணவர்கள் மதனிடம் பணம் தந்தனர். பச்சமுத்துவிடம் உள்ள பணத்தை மீட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் தரவேண்டும்” என்றார்.
 
மதன் தாயார் தரப்பில் ஆஜரான வக்கீல் இன்ஃபேன்ட் தினேஷ் வாதாடும்போது, ”காவல் துறையினர் தொடர்ந்து உண்மையை மறைக்கிறார்கள். சுமார் 109 பேர் புகார் கொடுத்துள்ளனர். ரூ. 70 கோடி பணம் இழந்து பெற்றோர்கள் தவிக்கிறார்கள். சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியே வரும்.
 
எனவே உயர்நீதிமன்றம் சிபிஐக்கு விசாரணையை மாற்ற வேண்டும். பணமும் தர மறுக்கிறார்கள். வேறு கல்லூரிக்கும் மாணவர்களை சேர்க்க மறுக்கிறார்கள். எனவே நியாயமான விசாரணை நடத்தவேண்டும்” என்று கூறினார்.
 
இதை கேட்ட நீதிபதிகள், கடந்த 75 நாட்கள் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. புகாரில் பச்சமுத்து பெயர் குறிப்பிட்டும் ஏன் அவரிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை.   இந்த வழக்கில், பணம் வாங்கிக் கொண்டு கொடுக்கப்பட்ட ரசீதில் கையெழுத்தை ஏன் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை? வழக்கை முறையாக விசாரிக்காதது காவல்துறைக்கு அவமானமாக இல்லையா? தேவைப்பட்டால் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்  என்றார். 
 
இதன் பின்னர் நீதிபதிகளின் கேள்விகளுக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ’இரண்டு வாரங்களில் வேந்தர் மூவிஸ் மதனை கைது செய்து விடுவோம் என்றும், தேவைப்பட்டால் பச்சமுத்துவை கைது செய்ய தயக்கம் ஏதுமில்லை’ என்றும் கூறினார்.
 
இதையடுத்து, மதனை வரும் 30-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த பணம் யாரிடம் உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி நீதிபதிகள் கால அவகாசம் வழங்கினர்.