1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (13:54 IST)

புதிய மோட்டார் சட்டம் அமல்.. இனி எவ்வளவு அபராதம்? – முழு விவரம்!

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அபராதம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் நகரங்கள் மற்றும் பல பகுதிகளிலும் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் வாகன நெரிசலும் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து விதிகள் மற்றும் அபராதம் உள்ளிட்டவற்றை கடுமையாக்கி புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இனி இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும். போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ.500 அபராதமாகவும், இரண்டாவது முறை ரூ.1500 அபராதமாகவும் வசூலிக்கப்படும்.


இருசக்கர வாகனங்களை பதிவு செய்யாமல் இருந்தால் முதல்முறை ரூ.500 அபராதமும், இரண்டாவது முறை ரூ.1500 அபராதமும் விதிக்கப்படும். ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதுபோல தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தம் எழுப்பினால் ரூ.1000 அபராதமாகவும்,  ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதமாகவும், வாகனத்திற்கு வெளியே கம்பிகள், மூட்டைகள், சரக்குகள் ஆகியவை நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் வாகனங்களை இயக்கினால் ரூ.20 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K