வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 4 மே 2018 (20:38 IST)

நீட் தேர்வு எழுத உதவி வேண்டுமா? - இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள்

தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உதவிகள் குவிந்து வருகிறது.

 
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றமும் கைவிரித்து விட்டது.
 
எனவே, மாணவர்களுக்கு உதவே அரசே முன்வர வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் கோரிக்கை வைத்தனர். எனவே, சுகாதரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
 
இந்நிலையில், வேறு மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ பலரும் முன் வந்துள்ளனர். 
 
கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தங்குமிட வசதியும், தேர்வு மையத்தை சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
அதேபோல், ராஜஸ்தானில் உள்ள தமிழ் சங்கங்கள், மற்றும் சிங்கப்பூர் இணையதள குழு  உள்ளிட்ட பல அமைப்புகள் தமிழக மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளன.
 
கேரளாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் +6591834946 மற்றும் 919655333311 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு பேருந்து வசதி செய்து தரப்படும் என சிங்கப்பூர் இணையதள குழு கூறியுள்ளது. அதேபோல், ராஜஸ்தான் செல்லும் மாணவர்கள் திரு. முருகானந்தம் -9790783187, சௌந்தரவல்லி - 8696922117, பாரதி 7357023549 ஆகிய எண்களை தொடர்பு கொண்டால் உணவும், தங்குமிடம், வாகன உதவி என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்கள் செல்லும் மாணவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நுழைவு சீட்டைக் காட்டி ரூ.1000ஐ பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
எனவே, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த உதவிகளை பயன்படுத்தி பயன் பெறலாம்.