1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2026 (14:35 IST)

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகள்.. இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்கள் கொந்தளிப்பு..!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகள்.. இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்கள் கொந்தளிப்பு..!
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தீவிர வான்வழி தாக்குதலில், ஈரானின் மினாப் நகரில் உள்ள பள்ளி மாணவிகள் கொடூரமாக பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த 165 பள்ளி மாணவிகளின் இறுதி ஊர்வலத்தில், இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர் மல்கப் பிரியாவிடை அளித்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த ஈரான் மக்களையும் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
இறுதி ஊர்வலத்தின் போது திரண்டிருந்த மக்கள், அப்பாவி மாணவிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஆவேசமான முழக்கங்களை எழுப்பிய மக்கள், தங்களின் ஆழ்ந்த வேதனையையும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். 
 
ஏற்கனவே ஈரானின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு பதற்றம் நிலவி வரும் சூழலில், தற்போது மாணவிகள் பலியானது போரின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 
 
சர்வதேச அளவில் அமைதி கோரிக்கைகள் எழுந்தாலும், களத்தில் தொடரும் இத்தகைய உயிரிழப்புகள் மனிதாபிமானமற்ற செயலாக விமர்சிக்கப்படுகின்றன. உயிரிழந்த பிஞ்சு உயிர்களுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என முழக்கமிட்டனர்.
 
Edited by Siva