1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (09:10 IST)

கணவனைக் கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த மனைவி – மூன்று மாதங்களுக்குப் பின் கண்டுபிடிப்பு !

விருதுநகரில் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனைக் கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்துள்ளார் மனைவி.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் எனும் ஊரைச் சேர்ந்த தம்பதிகள் சுப்புராஜ் மற்றும் பிச்சையம்மாள். இவர்களுக்கு சுரேஷ் என்றொரு மகன் இருக்கிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சுப்புராஜ் அடிக்கடி தனது மனைவி மற்றும் மகனிடம் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் குடித்துவிட்டு வந்த சுப்புராஜ் வழக்கம்போல மனைவி மற்றும் மகனுடன் சண்டை வளர்க்க இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளனர். இதில் சுப்புராஜ் மயங்கி இறந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த இருவரும் சடலத்தை மறைக்க வீட்டுக்கு அருகிலேயே குழி ஒன்றைத் தோண்டி அதில் சுப்புராஜ் சடலத்தை புதைத்துள்ளனர். உறவினர்களிடம் சுப்புராஜ் காணாமல் போனதாக நாடகம் ஆடியுள்ளனர்.

ஆனால் இவர்களின் நடவடிக்கை மேல் சந்தேகம் கொண்ட சுப்புராஜின் சகோதரி வீட்டுக்கு அருகே குழி ஒன்று தோண்டப்பட்டு மூடப்பட்டு இருப்பதைப் பார்த்து தாசில்தாருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அந்த குழியைத் தோண்டி பார்த்தபோது அதில் சுப்புராஜின் எலும்புகள் மட்டும் கிடைத்துள்ளன. இதையடுத்து பிச்சையம்மாள் மற்றும் சுரேஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காவல்துறையினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.