1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (08:48 IST)

திமிங்கலங்களை விடுத்து மீன் குஞ்சுகளை பிடிக்கிறார்கள் – ஸ்டாலின் அறிக்கை

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக கருதுவதால் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்ததாக 99 பேர் எழுதிய தேர்வு செல்லாது என அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் எழுதியதும் அழிந்துவிடும் மை கொண்டு எழுதியதாகவும், கிளார்க், தேர்வு மைய அதிகாரிகள் துணையோடு அதில் விடைத்தாளில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள சிபிசிஐடி போலீஸார் பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த தேர்வு முறைகேடு குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ”டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு சிறிய கிளார்க்கால் நடந்தது போல் தெரியவில்லை. இதில் பெரிய அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. திமிங்கலங்களை விடுத்து மீன் குஞ்சுகளை பிடிக்க முயற்சிக்கிறார்கள். முறைகேடு நடந்து 24 நாட்கள் கழித்து அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடத்துவது ஏன்? அமைச்சருக்கு நெருங்கியவர்கள் இந்த முறைகேட்டில் தொடர்புப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.