1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (13:13 IST)

தஞ்சை கோயில் கும்பாபிஷேக சர்ச்சை; பின்னணியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள்.. ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் குறித்த சர்ச்சையின் பிண்ணனியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டும் என தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். ஆனால் பல்லாண்டு காலமாக  பின்பற்றி வரும் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிரதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.

இந்நிலையில் ”தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தவேண்டும்” என்று எழுதியிருக்கும் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து, போராட்டத்தில் பங்கேற்பதாக உள்ள இஸ்லாமியர்களின் பெயர்களை சுட்டிக்காட்டி, தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் குறித்த சர்ச்சையின் பின்னணியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அப்பதிவில், ”இந்து மதத்தில் பிளவும் குழப்பமும் ஏற்படுத்தும் சதிச்செயலே இச்செயல், மசூதிகளில் அரபு மொழியில் வழிபாடு நடத்தும் சக்திகளின் கைக்கூலிகள் இவர்கள்” எனவும் தெரிவித்துள்ளர்.