பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து! - அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!
கடந்த சில நாட்களாக ஆசிரியர்களே மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவங்கள் வெளியே வந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த செய்திகள், நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 3 ஆசிரியர்கள் சேர்ந்து 13 வயது மாணவியை வன்கொடுமை செய்த சம்பவம், மணப்பாறையில் ஆசிரியர் மாணவியை வன்கொடுமை செய்த சம்பவம் ஆகியவை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டால் என்ன செய்வது என பலரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் “பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு காவல்துறை மூலமாக கடும் தண்டனைகள் பெற்றுத் தரப்படும். மேலும் ஒழுங்கு நடவடிக்கையோடு நிறுத்தாமல் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச்சான்றுகளும் ரத்து செய்யப்படும்” என எச்சரித்துள்ளார்.
Edit by Prasanth.K
