வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 1 டிசம்பர் 2018 (16:15 IST)

மாணவர் உயிரிழப்பு; டிரைவர் கைது –யார் மேல் தவறு?

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் நேற்று மாலை பஸ்ஸ்ல் படிக்கட்டில் தொங்கி சென்றபடி சென்ற 9 ஆம் வகுப்பு மாணவன் கபிலன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

மாணவன் மரணம் சம்மந்தமாக பொதுமக்கள் சம்பவ இடத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது பொது மக்கள் மோசமான சாலைப் பராமரிப்பே இது போன்ற விபத்துகளுக்குக் காரணம் என்று கோஷமிட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலிஸார் சாலைகளை சரி செய்வதாக வாக்களித்துள்ளனர்.

இந்த சோக சம்பவம் காரணமாக பஸ்ஸை ஓட்டிய மீஞ்சூரைச் சேர்ந்த டிரைவர் விநாயகத்தைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் இதுபோன்ற பேருந்து விபத்துகள் அதிகளவில் நடந்து வருகின்றன. இந்த விபத்துகள் குறித்தும் மாணவர்களின் விட்டேத்தியானப் போக்குகள் குறித்தும் எழுத்தாளர் விஜய்பாஸ்கர் முக்கியமான கருத்தினைப் பகிர்ந்துள்ளார். அவரது முகநூல் பதில் அவர் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

’இதில் பரிதாபத்துக்குரியவர் இந்த பஸ்ஸை ஒட்டிய டிரைவரும்தான். மாணவர்கள் அவ்வளவு தொந்தரவு செய்வார்கள். படிக்கட்டில் இருந்து ஏறிவா என்றால் கேட்கவே மாட்டார்கள்.பள்ளி விடும் நேரத்தில் நீங்கள் பஸ்ஸில் பயணம் செய்தால் இதை நிறைய பார்க்கலாம். கல்லூரி மாணவர்களை விட ஆறாம் வகுப்பிலிருந்து பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் அதிகம் ஃபுட்போர்டு அடிப்பார்கள். நாம் சொல்லும் போது நக்கலோ அல்லது நம் பார்வையை தவிர்த்தோ அவர்கள் செய்வதை செய்து கொண்டுதான் இருப்பார்கள். கூட்டமாக இல்லாத பஸ்ஸிலும் ஃபுட்போர்டுதான்.

அனைத்து டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் இது போல ஃபுட்போர்டு மாணவர்களை பிடித்து தலையில் கொட்டி அறிவுரை சொல்லும் உரிமை கொடுக்கபட வேண்டும்.கொடுப்பார்களா ?  சிறுவர்கள் என்பார்கள்.

அதையே வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் பரவ விட்டு வேலைக்கே உலை வைப்பார்கள். டிரைவர் பஸ்ஸை நேரத்துக்கு எடுத்து செல்லாவிட்டாலும் டைம் கீப்பர் திட்டுவார். மாணவர்களிடம் மேலே ஏறுங்கள் என்று சொன்னாலும் அவர்கள் கேட்பதே இல்லை. கொஞ்சம் Negative Mode க்கு என்று கண்டிக்கவும் இங்கே வழியில்லை.
அப்பாவி டிரைவரை கைது செய்வதுதான் அவர்களுக்கு தெரிந்த ஒரே வழியாம். இதற்காக மறியல் செய்த பொதுமக்கள் இனிமேல் படிக்கட்டில் பயணம் செய்யும் சிறுவர்களையும் ரெண்டு சாத்து சாத்தி கண்டிப்பார்களா? இந்திய இளம் சமூகத்தை கையாள  ”ஒரு முறைப்பு” தேவை இல்லாவிட்டால் இந்த ஃபுட்போர்டு மரணத்தை தடுக்கவே முடியாது.
சென்னையில் கடந்த இருபது வருடங்களாக மாநகர பேருந்துகளில் பயணம் செய்பவன் என்ற முறையில் இதை சொல்ல முடியும்...’