ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (10:35 IST)

வந்தோமா.. படம் பாத்தோமான்னு இருக்கணும்! – பாண்டிய வாரிசுகள் எச்சரிக்கை போஸ்டர்!

Madurai Poster
இன்று பொன்னியின் செல்வன் படம் வெளியாகியுள்ள நிலையில் மதுரையில் பாண்டிய வாரிசுகள் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் இன்று ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே தமிழகத்தின் பெரும்பான்மை திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. காலை முதலே படத்திற்கான வரவேற்பும் நல்ல விதமாக இருந்து வருகிறது.

பாண்டிய மன்னனான முதலாம் வீரபாண்டியனின் தலையை வெட்டிக் கொன்ற சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனை பழிதீர்க்க பாண்டிய ஆபத்துதவிகள் சபதம் எடுப்பது பொன்னியின் செல்வன் கதையின் முக்கியமான பகுதியாகும். மதுரை பாண்டியர்கள் ஆண்ட பகுதி என்பதால் அங்கு பொன்னியின் செல்வன் வெளியாகியுள்ள அதே சமயம் பாண்டியர்கள் ரசிகர்களிடம் இதுகுறித்த வரலாற்று மோதலும் உள்ளது.


இந்நிலையில் மதுரையில் பொன்னியி செல்வன் வெளியாகியுள்ள நிலையில் அங்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது. அதில் “சோழர்களே.. பாண்டிய நாட்டுக்கு வந்தோமா.. படத்தை பாத்தோமான்னு இருக்கணும். ஏதாவது எசக்குபிசகாக பண்ண நினைத்தால் அவ்வளவுதான்” என வாசகம் இடம் பெற்றுள்ளதுடன் கீழே “பகை மறவா பாண்டியரின் வாரிசுகள்” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

பாண்டிய மன்னன் வீரபாண்டியனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஆதித்த கரிகாலன் கொன்றதை இன்றும் நினைவுப்படுத்தும் விதமாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edited By: Prasanth.K