1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 2 ஜூலை 2020 (11:29 IST)

தலைமை காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தலைமை காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு:
சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில் இதுவரை இன்ஸ்பெக்டர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வழக்கில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் முன் சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதி அளித்த சாட்சியம் தான் முக்கியமாக கருதப்படுகிறது 
 
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவருக்கும் நடந்த கொடூரத்தை நேரில் கண்டவர் ரேவதி என்பதால் அவருடைய சாட்சியின் காரணமாகத்தான் இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் ரேவதிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு போலீஸ் துறையில் இருந்து எந்த விதமான மிரட்டலும் வரக்கூடாது என்றும் ஏற்கனவே மதுரை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் தற்போது இந்த வழக்கில் சாட்சியம் அளித்த தலைமைக்காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ரேவதியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது
 
முன்னதாக ரேவதியின் கணவர் சந்தோசம், செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனது மனைவி ரேவதி வாக்குமூலம் அளித்த நாளிலிருந்து சாப்பிடவில்லை. கடும் மனஉளைச்சலில் உள்ளார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான செல்போன் அழைப்புகள் வருகிறது. பாதுகாப்பு கருதி அதை எடுக்கவில்லை. எனது மனைவிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்“ என்றும் கூறியுள்ளார்.