1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 16 மே 2020 (15:16 IST)

மாதவரம் மார்க்கெட்டிலும் கொரோனா! – முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவியதால் மூடப்பட்ட நிலையில் தற்போது மாதவரம் மார்க்கெட்டிலும் கொரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சென்னையில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஊரடங்கு நாள் முதற்கொண்டும் செயல்பட்டு வந்த கோயம்பேடு மார்க்கெட்டி பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்பில் இருந்த விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பலருக்கும் கொரோனா இருப்பது உறுதியான நிலையில் கோயம்பேடு சந்தை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில் அரசு முன்கூட்டியே செயல்படவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் மாதவரம் பழ மார்க்கெட்டில் கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. பழங்கள் மற்றும் பூக்களுக்கு பிரசித்தி பெற்ற இந்த மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களில் 25 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அரசு மாதவரம் சந்தை குறித்து முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.