வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (12:15 IST)

காருக்குள் என்னை வைத்து கதவை சாத்தினார் - மீ டூ வில் சிக்கிய சுசி கணேசன்

தான் தொலைக்காட்சியில் பணி செய்து கொண்டுருந்த போது, இயக்குனர் சுசி கணேசன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் இயக்குனர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

 
மீ டூ விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. பாலிவுட்டில் நானா பாடேகர் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிக்கியுள்ளனர். அதேபோல், கோலிவுட்டில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல்  புகாரை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த பல பெண்களும், தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில், கவிஞரும், குறும்பட இயக்குனருமான லீனா மணிமேகலை, திருட்டுப்பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் புகாரை கூறியுள்ளார்.  இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டே அவர் பதிவு செய்துள்ளார். அதை தற்போது டிவிட்டர் பக்கத்தில் அவர் மீ டூ ஹேஷ்டேக்குடன் பதிவு செய்துள்ளார்.

 
அந்த பதிவில் “2005 இருக்கும். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வேலை செய்துக் கொண்டிருந்தேன். அன்று ஒரு பிரபல இளம் இயக்குநரை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நேர்காணல் செய்தேன். ஷூட்டிங் முடிந்தபோது இரவு ஒன்பதரை மணி. வழக்கமாக நான் ஆட்டோ எடுத்து தான் வீடு திரும்புவது வழக்கம். ஸ்டூடியோவில் இருந்து தெருமுனை வரை நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, நான் நேர்காணல் செய்த இயக்குநரின் கார் என்னருகில் வந்து நின்றது. 
 
"வடபழனி தானே வீடு, நான் வேணும்னா ட்ராப் பண்ணிடறேன்" என்று சொன்ன "இயக்குநரை" நம்பி காரில் ஏறினேன். ஏறிய சில நிமிடங்கள் உரையாடல் நன்றாகத்தான் போனது. திடீரென அவர் குரலின் டோன் மாறியது. விலை உயர்ந்த அந்தக் காரின் சென்டரல் லாக் சத்தமாக ஒரு முறை சீறி அடங்கியது. என் மடியில் இருந்த மொபைலைக் கைப்பற்றி அதை ஆஃப் செய்து காருக்குள் எங்கோ எறிந்தார். தன் அபார்ட்மெண்டுக்கு நான் வரவேண்டும் என்று மிரட்டினார். அதிர்ச்சியில் வெலவெலத்துப் போன எனக்கு கொஞ்சநேரம் எதுவும் புரியாமல் செயலிழந்துப் போனேன். 

 
சுதாரித்து முதலில் தன்மையான குரலில் என்னை உடனே இறக்கிவிடுமாறு கேட்டேன். பின் கெஞ்சிக் கேட்டேன். கார் கதவை உடைத்து விடுவேன் என மிரட்டினேன். அலறினேன். இருபது நிமிடத்தில் விட வேண்டிய இடத்திற்கு 45 நிமிடங்களாக கார் சென்னை தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தது. என் பையில் ஒரு குறுங்கத்தி வைத்திருப்பேன். பொறியியல் கல்லூரி காலத்தில் இருந்து எனக்கு அது வழக்கம். அன்று அதற்கு வேலை வந்தது. ஒரு குறுங்கத்தி அந்த இயக்குநர் பொறுக்கியை என்னை என் வீட்டின் அருகில் இறக்கிவிட வைத்தது. என் மொபைலை திருப்பித் தர வைத்தது. இன்று இவ்வளவு ரைட்ஸ் பேசும் எனக்கு அன்று நடந்ததை நெருக்கமான வர்களிடம் சொல்வதற்கு கூட தைரியமில்லை. 
 
ஊடக வேலை வேண்டாம் என்று கண்டித்துக் கொண்டிருந்த குடும்பம் இந்த நிகழ்வை காரணம் காட்டி வேலையில் இருந்து நின்றுவிட சொல்வார்கள் என்று அச்சம். "நோ" சொல்லிவிட்டதால் திரைத்துறை வட்டாரத்தில் செல்வாக்குள்ள அந்த "இயக்குநர்" என் பெயரைக் களங்கப் படுத்துவான் என்ற சிறுபிள்ளைத்தனமான பதட்டம் வேறு. எனக்குள்ளே புதைத்த பல கசப்புகளில் இந்நிகழ்வும் ஒன்று. பல வருடங்கள் கடந்துவிட்டன. நினைத்துப் பார்த்தால் இன்னும் நடுக்கமாகத் தான் இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
திரைத்துறையில் வைரமுத்து, ராதாரவியை தொடர்ந்து தற்போது சுசி கணேசனும் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.