திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. வழக்கப்படி, மலையில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து சமய அறநிலையத் துறை, மலை உச்சியில் உள்ள பழமையான மற்றொரு தூணில் தீபம் ஏற்றாததால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரருக்கு ஆதரவாக சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்போடு சென்று மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால், தமிழ்நாடு காவல்துறை இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மறுத்ததுடன், மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்தது.
இதை தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு முறையிட்டார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
"சிஐஎஸ்எஃப்-ன் பணி உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே. அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே உள்ளது. அதை தாண்டி மனுதாரருக்குப் பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல என் தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடினார்.
அப்போது நீதிபதிகள், "தீப தூண் கோயிலை விட பழமையானதா?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பு, தீபத் தூண் பழமையானதா என்பது தெரியவில்லை என்றும், 1862-ம் ஆண்டு முதலே அது பயன்பாட்டில் இல்லை என்றும் பதிலளித்தது.
"தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது," என்று அரசு தரப்பு தங்கள் வாதங்களை முடித்தது.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Edited by Mahendran