1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 24 ஜூன் 2024 (20:54 IST)

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள்.! அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..!!

Samynathan
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
சட்டசபையில் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  அடுத்த ஆண்டு முதல் ஜனவரி 25ம் நாள் தாய் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அடுத்த ஆண்டு முதல் ஜூன் மூன்றாம் தேதி செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும் என்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கட்டுரை, பேச்சுப்போட்டி, மாவட்ட மாநில அளவில் நடத்தி பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் இதற்காக ஒரு கோடியே 88 லட்சத்து 57 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
 
தமிழ் அறிஞர்கள் ஒன்பதின்மர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்ற அவர், நூலுரிமை தொகைக்கென ரூபாய் 91 லட்சத்திலிருந்து 35 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  டெல்லி தமிழ் சங்கத்தின் கலையரங்கத்தில் தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
 
சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர் நூலை பதிப்பிக்கும் பதிப்பாளருக்கு பரிசு தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றும் கூடுதல் செலவினத்திற்கு ரூபாய் 11 லட்சத்து 55 ஆயிரம் வழங்கப்படும் என்றும் ஜனவரி 25ம் நாளினை தமிழ்மொழித் தியாகிகள் நாள் என பின்பற்றி, புகழ் வணக்கம் செய்திட ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

 
முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது தோற்றுவிக்கப்படும் ரூபாய் 17 லட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும், வீறுகவியரசர் முடியரசன் அவர்களின் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் திருவுருச் சிலை நிறுவிட ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும், சண்டிகர் தமிழ் மன்றம் கட்டிட விரிவாக்க பணிக்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்.