வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (18:45 IST)

'இந்து மதம்' என்ற குறிப்பே கிடையாது: மீண்டும் சீண்டிய கமல்ஹாசன்

இந்தியாவில் இந்து மதம் என்ற குறிப்பே கிடையாது என்றும் இந்து மதம் என்பது ஆங்கிலேயர் கொடுத்த அடையாளம் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
இந்து மதம் குறித்து கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
சீப்பை ஒளித்துவைத்து கல்யாணத்தை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நினைக்கின்றன. மக்கள் எடுத்துவிட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. ஆழ்வார்களாலோ, நாயன்மார்களாலோ இந்து என்ற குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ 'இந்து' என நாமகரணம் செய்யப்பட்டோம்.
 
ஆண்டு அனுபவித்து சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்பொழுது மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாக கொள்வது எத்தகைய அறியாமை
 
நாம் இந்தியர் என்கின்ற அடையாளம் சமீபத்தியதுதான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக, அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும். 
 
புரியலன்ற சோமாரிகளுக்கு.... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம். கோடின்ன உடனே பணம் ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல. அரசியல்வாதிகல் அல்ல, வெறும் வியாதி! தமிழா நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்' என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
 
இந்து தான் முதல் தீவிரவாதி என கமல் கூறியபோது இந்து என்ற வார்த்தை ஆங்கிலேயர் விட்டு சென்ற என்பது அவருக்கு தெரியாதா? நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது என் குடும்பம் இந்து குடும்பம் என்று கமல் கூறியபோது அவருக்கு இது ஆங்கிலேயர் விட்டுச்சென்றது தெரியாதா? என டுவிட்டர் பயனாளிகள் கமலுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.