வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 14 டிசம்பர் 2016 (14:18 IST)

ஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

ஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


 
 
கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வராக இருந்த ஜெயலலிதா. அதன் பின்னர் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் ஜெயலலிதா மரணமடைந்தார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
 
இந்த இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதாவின் உடல் நிலைகுறித்து பல்வேறு செய்திகள், வதந்திகள், தகவல்கள் உலா வந்தன. மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்க யாருமே அனுமதிக்கப்படவில்லை.
 
அவருடைய தோழி சசிகலா மட்டும் தான் அவருடன் இருந்தார். ஜெயலலிதாவின் இரத்த உறவுகள், தமிழக ஆளுநர், எதிர்கட்சி தலைவர், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.
 
ஜெயலலிதா சிகிச்சை பெறும் ஒரு புகைப்படத்தை கூட வெளியிடவில்லை. இந்நிலையில் ஜெயலலிதா மரணமடைந்தார் என செய்தி வரவும் அவரது மரணம் குறித்த சந்தேகங்களும் எழுந்தன. கடைசி வரை மர்மமாக இருந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து அரசு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால் எந்தவித தெளிவான பதிலும் இல்லை.
 
இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் இவர்கள் ஜெயலலிதாவின் இரத்த உறவு இல்லை என்பதால் இந்த வழக்கு தள்ளுபடியாகவும் வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் இரத்த உறவுகள் வழக்கு தொடரும் பட்சத்தில் ஜெயலலிதா குறித்த தகவல் வெளியாக வாய்ப்பு உள்ளது.