சனி, 14 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (16:24 IST)

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்.! ரூ. 89.18 கோடி சொத்துக்கள் முடக்கம்.!!

Jagadratsakan
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ. 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜெகத்ரட்சகனின் ரூ. 89.18 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்வதாக அறிவித்துள்ளது.
 
சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை அரக்கோணம் தி.மு.க., எம்.பி. ஜெகத்ரட்சகன் வாங்கி உள்ளார். பின்னர் அந்த பங்குகளை தனது மனைவி, மகன், மகள் ஆகியோரின் பெயர்களில் மாற்றியதாக கூறப்படுகிறது. 

இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.  இது குறித்து விளக்கம் அளிக்க கோரி  ஜெகத்ரடசகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.  

இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் விதிமீறல் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ், அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 
 
மேலும் ஜெகத்ரட்சனுக்கும், அவரது குடும்பத்திற்கும் ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கான உத்தரவு கடந்த 26ம் தேதி பிறப்பிக்கப்பட்டது எனவும் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.