1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 மே 2019 (13:58 IST)

திருமணமான காதலியுடன் தான் வாழ்வேன் : முன்னாள் காதலன் போராட்டம்

பூந்தமல்லியில் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள பெண்ணுடன் தன்னை சேர்த்துவைக்க வேண்டுமென  செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த காதலனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவேற்காடு பகுதியில் வசித்துவந்தவர் இளம் பெண் (25) இவருக்குத் திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்துவந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இவர் காணாமல் போனார்.
 
இதனையடுத்து இவரது கணவர் பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். பின்னர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஸ்ரீபெரும்புதூரில் வசித்துவந்த முரளி (30) என்பவரை சந்திக்கச் சென்றிருப்பது தெரியவந்தது.  போலீஸார் அப்பெண்ணை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி குழந்தைகள் கணவருடன் வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர் வீட்டுக்குச் செல்ல மறுத்துவிட்டு தான் காதலன் முரளியுடன் தான் வாழ்வேன் என்று கூறியதாகத் தெரிகிறது.
 
இதனை ஏற்காத போலிஸார் பெண்ணின் பெற்றோரை வரச் சொல்லி அவருடன் அனுப்பி வைத்தனர். பின்னர் முரளியை விசாரணைக்கு ஆஜராகுமாறு  சொல்லியிருந்த நிலையில் நேற்றிரவு காவல்நிலையத்திற்கு வந்தார். போலீஸாருடன் வாக்குவாதம் செய்ததாகத் தெரிகிறது.
 
அதனையடுத்து அருகில் இருந்த செல்போன் கோபுரத்தில் ஏறியவர் தன்னை காதலியுடன் சேர்த்துவைக்கக்கோரி போராட்டம் நடத்தினார். அங்கு விரைந்துவந்த போலீஸார் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தன் காதலி நேரில் வந்தால்தான் இறங்குவேன் என்று பிடிவாதமாக் கூறினார். 
 
இதனையடுத்து காதலி அவ்விடத்திற்கு வந்ததை அடுத்து  முரளி கீழே இறங்கினார். அவரைக் கைது செய்து தற்போது விசாரணை நடத்திவருகின்றனர்.