வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (13:39 IST)

அத்திவரதரருக்கு ஆபத்தா? அனந்தசரஸ் குளத்திற்கு 100 போலீஸ் பாதுகாப்பு ஏன்?

அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்திற்கு 100 போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு தரிசனம் தருவார். 
 
அந்த வகையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், 24 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி அளிப்பார். ஆனால், இம்முறை சயன் கோலத்தில் நீண்ட நாட்கள் காட்சி அளித்த அவர் நின்ற கோலத்தில் குறைவாகவே அருள் பாலித்தார். 
அத்திவரதரை தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து சுமார் ஒரு கோடி பேர் தரிசனம் செய்தனர். இந்நிலையில் அத்திவரதர் ஐதீகப்படி 48 நாட்கள் முடிந்தவுடன் மீண்டும் ஐதீக முறைப்படி கடந்த 17 ஆம் தேதி குளத்தில் வைக்கப்பட்டார்.
 
குளத்தில் தண்ணீர் வடிக்கப்பட்டு அத்திவரதரின் சிலையை வைத்துவிட்டு தற்போது குழாய் மூலம் அனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் விடப்படுகிறது. அதோடு குளத்தை சுற்றிலும் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாத காலம் போலீசார் கோவில் குளத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
போலீஸ் பாதுகாப்பிற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், சிலைக்கு ஆபத்து வராமல் பார்த்துக்கொள்ள பாதுகாப்பு போடப்பட்டிருக்கலாம் என பரவலான பேச்சு எழுந்துள்ளது. 
 
இதற்கு முன்னர் ஜீயர் ஒருமுறை திருட்டு பயம் காரணமாகவே அத்திவரதர் குளத்தில் வைக்கப்பட்டதகாவும், ஆனால் இப்போது அந்த பயம் இல்லாத காரணத்தால் வெளியிலேயே அவரின் சிலையை வைக்கலாம் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.