1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (14:09 IST)

நித்யானந்தாவிடம் மகள்களை பறிகொடுத்த குடும்பம்! மீண்டும் சர்ச்சை!

தனது மகள்களை நித்யானந்தாவிடமிருந்து மீட்டு தர வேண்டும் என்று தம்பதியினர் ஒருவர் போலீஸில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்து அவரது சீடராக மாறி பணிபுரிந்து வந்திருக்கிறார் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஒருவர், தான் சேர்ந்தது மட்டுமல்லாமல் தனது இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் பிள்ளையையும் ஆசிரமத்தில் சேர்த்துள்ளார்.

நீண்ட நாட்களாக குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் அவர்கள் வளர்ந்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் தனது குழந்தைகளை பார்க்க குஜராத் ஆசிரமத்திற்கு சென்றிருக்கிறார் தந்தை. ஆனால் அவரை அங்கிருந்த ஆசிரம நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. தொடர்ந்து போராடி தோற்றுபோன அந்த நபர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.

அதன்படி போலீஸாரோடு சென்று தன் இளைய மகளையும், மகனையும் அழைத்து வந்திருக்கிறார் தந்தை. பெரிய மகளுக்கு வயது 18க்கு மேல் ஆகியிருக்கும் நிலையில் ஆசிரமத்தில் இருந்து வர அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தனது பெரிய மகளையும் மீட்க போராடி வருகிறாராம் அந்த தந்தை.

அதை தொடர்ந்து பெரிய மகள் எங்கே இருக்கிறார் என்பதும் புரியாத புதிராக இருப்பதால் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நித்யானந்தாவுக்கு இந்தியா முழுவதும் இருக்கும் பல்வேறு ஆசிரமங்களில் இதுபோல நிறைய பெண்கள் இருப்பதாகவும், அவர்கள் வீடுகளில் உள்ளவர்கள் புகார் அளித்தாலும் அவர்கள் திரும்ப செல்ல மறுப்பதாகவும் நித்யானந்தா சுற்று வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.