1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2023 (11:15 IST)

பாடகி மீனாள் ஜெயினின் இன்னிசையில் நனைந்த ஈஷா!

isha
ஈஷா நவராத்திரி விழாவின் 6-ம் நாளான இன்று (அக்.20) பின்னணி பாடகி மீனாள் ஜெயினின் இசை நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.


 
கோவை ஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா கடந்த 15-ம் தேதி முதல் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் நம் பாரத பண்பாட்டையும், தமிழ் கிராமிய கலைகளையும் அறிந்து கொள்ளும் விதமாக தினமும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நவராத்திரி கொண்டாட்டத்தின் 6-ம் நாளான இன்று மும்பையைச் சேர்ந்த பின்னணி பாடகி மீனாள் ஜெயின் அவர்களின் பக்தி பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சி அற்புதமாக நடைபெற்றது. லிங்க பைரவி தேவி மற்றும் பெண் தெய்வங்களை போற்றி அவர் பாடிய பாடல்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், அமித் த்ரிவேதி உள்ளிட பிரபல இசையமைப்பாளர்கள் இசை அமைத்த பாடல்களை மீனாள் ஜெயின் பாடி அசத்தியுள்ளார். மேலும், நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜெயதே’ என்னும் தொகைக்காட்சி நிகழ்ச்சியில் சஹி என்ற பாடலை பாடி அனைவரின் மனங்களை கொள்ளை கொண்டவர். இவர் இந்தியன் ஐடல் சீசன் 2-வில் கலந்து கொண்டு 6-ம் இடத்தை பிடித்த பெருமைக்குரியவர்.

முன்னதாக, வெள்ளிங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் திரு.வேலு மயில்சாமி, கோவை மாவட்ட திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் திரு. கர்ண பூபதி, போளுவாம்பட்டி பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் திரு. வெள்ளியங்கிரி உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

ஈஷாவில் நவராத்திரி விழாவையொட்டி இசை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பாரம்பரிய ஆடைகள், அணிகலன்கள், ஓவியங்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்று வருகிறது. 7-ம் நாளான நாளை (அக்.21) சிவ நாராயணன் குழுவினரின் ராஜஸ்தானிய நாட்டுப்புற நடனம் மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.