1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 டிசம்பர் 2023 (14:32 IST)

உதவிகளை செய்யாமல், வானிலை ஆய்வு மையத்தை குறை கூறி வருகிறது விடியா அரசு: எடப்பாடி பழனிசாமி..

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்யாமல், வானிலை ஆய்வு மையத்தை குறை கூறி வருகிறது விடியா அரசு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மிக்ஜாம் புயல் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை எப்படி கையாள்வது என்ற படிப்பினையை பாடமாக எடுத்துக்கொண்டு, தென் மாவட்டங்களுக்கான கனமழை எச்சரிக்கையின்போது இந்த திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இந்த விடியா திமுக அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தை குறை கூறிக்கொண்டு பாதிக்கப்பட்ட நான்கு தென் மாவட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் தேவையான உதவிகளை செய்யாமல் தட்டிக் கழிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
 
 ஒரு மாநில அரசு, இயற்கைச் சீற்றம் என்றால் எதற்கும் தயார் நிலையில் அரசு இயந்திரங்களை வைத்திருக்க வேண்டும். கடுமையான மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் அரசு நிர்வாகம், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நேரடியாக ஆறுதல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிவாரணத்தின்போது மாநில அரசு நிர்வாகம் உடனடியாக தன் சொந்த நிதியைப் பயன்படுத்தி நிவாரணப்பணிகளை தொடங்க வேண்டும். கடந்த வாரம் பெய்த கனமழையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டபோது, விடியா திமுக அரசின் முதலமைச்சரோ மக்கள் மீது சிறிதும் அக்கறையின்றி, தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்காக டெல்லிக்குச் சென்றுவிட்டார். 
 
கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பற்றி அறிந்தவுடன், 19.12.2023 அன்று நான் நேரடியாக கழக நிர்வாகிகளுடனும், மாவட்டக் கழக நிர்வாகிகளுடனும் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினேன். தொடர்ந்து,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக நிர்வாகிகள் நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். தென் மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் தங்களது உடைமைகள் மற்றும்வாகனங்களை இழந்துள்ளனர். வியாபாரிகள் கடைகளில் உள்ள விற்பனைப் பொருட்கள் மற்றும் கணினி, மின்சாதனப் பொருட்கள் என்று அனைத்தையும் இழந்துள்ளனர். கனமழையால் நெல், வாழை, வெற்றிலைக் கொடி போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். தாங்கள் வளர்த்து வந்த கோழிகள் மற்றும் கால்நடைகளை இழந்துள்ளனர். கடற்கரை ஓரங்களில் உள்ள உப்பளங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி 100 சதவீதம் பாதிப்படைந்துள்ளன. 
 
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. கடை வீதியில் உள்ள கடைகளில் இருந்த யூரியா, காம்ப்ளக்ஸ் உரமூட்டைகள், அரிசி, நெல் மூட்டைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும், தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம் உட்பட அரசு அலுவலகங்கள் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கி ஏரல் நகரமே முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது முதல்வர் ஸ்டாலின் டெல்லி போனார்.
 
வெள்ளம் பாதித்துள்ள மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடியில் ஏழு நாட்கள் ஆகியும் இன்னும் தண்ணீர் வடியாததால் பல பகுதிகளில் தேங்கிய மழை நீரில் கால்நடைகள் இறந்து மிதக்கின்றன. இதனால், கடும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தேங்கிய வெள்ள நீரை அப்புறப்படுத்த பிற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள ராட்சத மோட்டார்களை உடனடியாகக் கொண்டு சென்று தேங்கிய வெள்ள நீரை அகற்ற வேண்டும். இல்லையெனில் தேங்கிய தண்ணீரில் கடுமையான நோய்த் தொற்று உருவாகும் அபாயம் உள்ளது என்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தற்போது விடியா திமுக அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இதை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். 
 
மேலும், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், விளை நிலங்கள், வணிக நிறுவனங்கள், உப்பளங்கள், பாதிக்கப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உரியவர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், மீண்டும் அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குமாறும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நிவரணமாக வழங்க, அரசு கொண்டுவரும் வாகனங்களை மக்கள் ஆங்காங்கே மறித்து பொருட்களை எடுத்துச் செல்லும் நிலைமை உருவாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதைத் தவிர்ப்பதற்கு அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நிவாரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். 
 
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைக் கழிவுகள், இறந்த கால்நடைகள் போன்வற்றை உரிய முறையில் அகற்றி, நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கு ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, சுகாதாரப் பணிகளை உடனடியாகத் துவங்கிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
 
Edited by Mahendran