1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 நவம்பர் 2020 (13:38 IST)

அரசு பள்ளி மாணவர்களின் தென்றலே.. தீபமே! – எடப்பாடியாருக்கு விதவிதமாய் பேனர்!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ள நிலையில் முதல்வருக்கு வைக்கப்பட்டுள்ள பேனர்கள் வைரலாகியுள்ளன.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இன்று மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதற்கான மாணவர்கள் தரவரிசை பட்டியலை முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் மருத்துவ படிப்பு கலந்தாய்வு கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க வந்ததால் அவருக்காக அப்பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ”அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கி வசந்தம் ஏற்படுத்திய தென்றலே.. மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றிய தீபமே” போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் இடங்களில் இவ்வாறாக கட்சி பேனர் வைத்து விளம்பரம் தேடுவதாக மற்ற கட்சியினர் சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிமுக அரசு செய்ததைதானே பேனர் வைத்துள்ளோம் என அதிமுகவினர் பேசி வருவதாக கூறப்படுகிறது.