1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 19 ஜனவரி 2019 (10:27 IST)

சயன், மனோஜை ஜாமீனில் எடுத்தது தி.மு.க.தான் – எடப்பாடிப் பாய்ச்சல் !

கொடநாடு எஸ்டேட்ட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களின் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாகக் கூறிய சயன், மனோஜ் ஆகியொரை திமுக தான் ஜாமீனில் எடுத்துள்ளது என முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அவரது கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கூலிப்படையைச் சேர்ந்த சயன் மற்றும் மனோஜ். இது சம்மந்தமாக ஊட்டியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

சென்ற வாரம் கொடநாடு எஸ்டேட் சம்பவம் தொடர்பாக தெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் எடுத்த ஆவணப்படம் ஒன்று வெளியாகி பரபரப்புகளை ஏற்படுத்தியது. அந்த ஆவணப்படத்தில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளையில் சம்மந்தப்பட்ட சயன் மனோஜ் ஆகியோரின் சம்பவம் குறித்த வாக்குமூலங்களும் இருந்தன. அதில் அவர்கள் இருவரும் சம்பவத்திற்கு தலைமை தாங்கிய கனகராஜ் (இப்போது உயிரோடு இல்லை) எடப்பாடிப் பழனிச்சாமி சொன்னதின் பேரிலேயே கொடநாடு எஸ்டேட்டுக்கு தங்களை அழைத்து சென்றதாகக் கூறினர்.

இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை ஆயுதமாகப் பயன்படுத்தி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் தமிழகப் போலிஸாரால் கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் இருவரும் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் 10000 ரூபாய் பிணைத்தொகைக் கட்டி ஜாமீன் பெற்றனர்.

இந்த ஜாமீனுக்குப் பின்னர் தி.மு.க.தான் இருக்கிறது என முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நேற்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் சிறப்புரையாற்றிய அவர் ‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாடு எஸ்டேட் தனி நபர்களின் (சசிகலா மற்றும் தினகரன்) கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களிடத்தில் ஆதாரம் இருந்தால் இத்தனை நாள் நம்மை விட்டுவைப்பார்களா… தமிழகத்தில் இப்போது  ஆட்சி சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படிப்பட்ட பொய்களைக் கூறிவருகின்றனர். சயன் மற்றும் மனோஜ் ஜாமீன் பின்னணியில் திமுக இருக்கிறது. கூலிப்படையினருடன் திமுக வுக்கு என்ன சம்மந்தம்’ எனக் கேள்வியெழுப்பினார்.

மேலும் ’சாமுவேலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதுதான் குறிக்கோள். அதற்காகவே ஆட்களை செட்டப் செய்து வீடியோ எடுத்து அதனை வெளியிட்டுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.