தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நாளுக்கு நாள் பாலியன் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருப்பூர் தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். திருமணமாகி 4 மாத கர்ப்பமாக உள்ள அவர் மருத்துவ பரிசோதனைக்காக தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதற்காக கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இண்டெர்சிட்டி ரயிலில் அவர் பயணித்துள்ளார்.
ரயில் கே.வி.குப்பம் ரயில் நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது இளம்பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்பகுதியில் மது அருந்திவிட்டு போதையில் நின்ற ஆசாமி இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண் கூட்டலிட்டுள்ளார். அதை கேட்டு சக பயணிகள் வருவதற்குள், கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் அவரை ரயிலுக்கு வெளியே தள்ளிவிட்ட அந்த ஆசாமி, ஒன்றும் தெரியாதது போல வேறு பெட்டிக்கு சென்றுள்ளார்.
ரயிலில் இருந்து விழுந்து தண்டவாளத்தில் அடிப்பட்டு படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
குற்றவாளிகளை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவற்றை வைத்து தேடியதில் கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே ரயிலில் இதுபோல பல பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K