செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 19 அக்டோபர் 2016 (12:00 IST)

சாட்சி சொன்னவரின் மகளை தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி சித்ரவதை

கந்துவட்டி புகாருக்கு சாட்சி கூறியவரின் மகளை தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கு சித்ரவதை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை சேர்ந்த ஆனந்தி என்பவர் பார்த்தசாரதி என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை வசூலிக்க வந்தபோது, ஆனந்தியை பார்த்தசாரதி தாக்கியதாக தெரிகிறது.
 
அதே தெருவில் வசித்து வருபவர் பாக்கியலட்சுமி. இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில், ஆனந்தியை பார்த்தசாரதி தாக்கிய சம்பவத்தை பாக்கியலட்சுமி நேரில் பார்த்துள்ளார்.
 
இது தொடர்பான புகாரில் பார்த்தசாரதி ஆனந்தியை தாக்கியது உண்மைதான் என்று கூறியுள்ளார். பார்த்தசாரதிக்கு எதிராக சாட்சி கூறியதால் ஆத்திரம் அடைந்த பார்த்தசாரதியின் ஆட்கள், பாக்கியலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
 
அப்போது, அங்கு 10ஆம் வகுப்பு படித்துவரும் பாக்கியலட்சுமியின் மகள் உஷா இருந்துள்ளார். அந்த கும்பல் உஷாவின் கை கால்களை கட்டி 200 லிட்டர் தண்ணீர் தொட்டியில் வைத்து சித்ரவதை செய்து கொலை செய்ய முயன்றுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட உஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து, பாக்கியலட்சுமி தரப்பில் கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியை கொலை செய்ய முயன்ற கந்துவட்டிக்கார கும்பலை உடனடியாக கைது செய்ய கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.