1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (11:57 IST)

தென் மாவட்டங்களுக்கு துணை ராணுவத்தை அனுப்புங்கள்: அமித்ஷாவுக்கு கிருஷ்ணசாமி கடிதம்

krishnasamy
தென் தமிழகத்தில் கலவரம் ஏற்படும் சூழல் இருப்பதால் தென் மாவட்டங்களுக்கு துணை இராணுவத்தை அனுப்ப வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது
 
தமிழ்நாட்டில், 2021 ஆம் ஆண்டில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் 1995 ஆம் ஆண்டில் நடந்ததை போன்ற கலவரச் சூழல், தென் மாவட்டங்களில் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும், தென் மாவட்டங்களில் 50 க்கும் அதிகமான கொலைகள் நடந்து உள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். 
தனது சொந்த நிலத்தில் உழைத்துப் பிழைப்பதற்கு வழியின்றி அஞ்சி வாழ வேண்டி இருக்கிறது. அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் உள்ளது. காவல் துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 90 சதவீதம் இருப்பதே இதற்கு காரணமாகும். 
 
தென் மாவட்டங்களில் கலவரம் வெடித்தால் அதை வைத்தே அரசியல் லாபம் அடையலாம் என தி.மு.க. அரசு கருதுகிறது. எனவே, தென் மாவட்டங்களில் நடந்த ஜாதி ரீதியான ஒடுக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சமூக கொடுமைகளை முறையாக விசாரணை நடத்த மத்திய உள்துறை சிறப்புக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும்.
 
மத்திய உள்துறை இணை அமைச்சரை தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும். தென் மாவட்ட மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில், சிறிது காலத்திற்காவது துணை ராணுவப் படையை அங்கு நிறுத்தி வைக்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில், அனைவரும் அச்சமின்றி தேர்தல் பணிகளைச் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும். சமூக விரோதிகளுக்கு துணையாக இருக்கும் காவல் துறையினரை இடமாற்றம் செய்திட வேண்டும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran