1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2022 (23:57 IST)

நகராட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக திமுக கவுன்சிலர் அறிவிப்பு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் பல பேரூராட்சி, நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இன்று மாநகராட்சிக்கான மேயர்கள், பேரூராட்சி, நகராட்சிகளுக்கான தலைவர்கள் பதவியேற்று வருகின்றனர். திமுகவுடன் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருந்த நிலையில் சில நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளை திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருந்தது.

ஆனால் தற்போது கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுகவினரே வெற்றிபெற்று பதவி ஏற்றுக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.    இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி பொதுசெயலாளர் துரைமுருகனுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் “கூட்டணி கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தை காத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதே கோரிக்கையை பாலகிருஷ்ணனும் விடுத்தார்.

இதையடுத்து, முதல்வரும், திமுக கட்சித் தலைவருமான ஸ்டாலின் தற்போது ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், மறைமுகத் தேர்தலில் கட்சித் தலைமையின் அறிவிப்பை மீறி போட்டியிட்டு வென்ற திமுகவினர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பொறுப்பை விட்டு விலகிவிட்டு  தன்னை    நேரில் வந்து சந்திக்கும்படி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, திருத்துறைப்பூண்டி  நகராட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக  திமுக கவுன்சிலர் பாண்டியன் அறிவித்துள்ளார்.