1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (14:00 IST)

ஐடிசி ஹோட்டல்ஸ் ஒத்துழைப்போடு டிப்ளமோ கல்வித்திட்டம்!

இந்திய விருந்தோம்பல் துறையில் திறன்மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்திய தொழில்துறை கூட்டமைப்பும், ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனமும், 18 மாத காலஅளவுடன் தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சிக்கான டிப்ளமா படிப்பை வழங்க சுவிட்சர்லாந்தின் EHL கல்விக்குழுமத்தோடு ஒத்துழைப்பை மேற்கொண்டிருக்கின்றன.

ஐடிசி கிராண்டு சோழா (சென்னை), ஐடிசி மௌரியா (புதுடெல்லி), ஐடிசி சோனார் & ராயல் பெங்கால் (கொல்கத்தா) மற்றும் ஐடிசி மராத்தா (மும்பை) ஆகிய நான்கு ஐடிசி லக்சரி ஹோட்டல் அமைவிடங்களில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டின், சென்னையில் EHL-ன் VET கல்வித்திட்டத்தில் 160-க்கும் அதிகமான மாணவர்கள் இக்கல்வித்திட்டத்தில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் முக்கிய விருந்தோம்பல் நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ‘VET by EHL’-ஐ வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு உத்தரவாதத்தையும் சிஐஐ வழங்கியிருக்கிறது.

EHL-ஆல் உருவாக்கப்பட்டிருக்கும், உலகளாவிய கற்றல் மேலாண்மை அமைப்பிற்கு ஆன்லைன் அணுகுவசதியை பெறும் மாணவர்கள், கோட்பாடு சார்ந்த அறிவுத்திறன் மற்றும் பயிற்சியின்போது கற்றுக்கொண்டுள்ள நடைமுறை திறன்கள் ஆகிய இரண்டின்மீதும் மதிப்பிடப்படுவார்கள். இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும்போது VET by EHL உலகளாவிய முன்னாள் மாணவர் வலையமைப்பின் ஒரு அங்கமாக இம்மாணவர்கள் இடம்பெறுவார்கள். இதற்கும் மேலாக, UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் சேர்ந்து பயிலவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இக்கல்வித்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தபிறகு பணியமர்த்தலுக்கு 100% உத்தரவாதம் இம்மாணவர்களுக்குத் தரப்படுகிறது. சர்வதேச டிப்ளமாவுடன் 18 மாத காலஅளவில் பணிக்கு தயாராகியிருக்கும் திறன் மற்றும் நிஜ பணியமைவிடங்களான ஐடிசி-ன் சொகு ஹோட்டல்களில் கற்றல் அனுபவம் ஆகிய பின்புலத்தைக் கொண்டிருக்கும் இம்மாணவர்கள் இந்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களால் விரும்பி பணியமர்த்தப்படுபவர்களாக இருப்பார்கள்.

இக்கல்வித்திட்டத்திற்கான மொத்த கல்வி கட்டணம் ரூ.3,00,000 (வரிகள் கூடுதலாக).

இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வித்திட்டத்தின் கீழ் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களோடு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

EHL-ன் இணை இயக்குனர் மற்றும் பிராந்திய தலைவர் திரு. பிரவீன் ராய் இச்செயல்திட்டம் பற்றி கூறியதாவது: “தற்போது நிலவும் திறன் இடைவெளியை நிரப்பவும், உலகளவில் விருந்தோம்பல் துறைக்கு பணியாளர்களை அனுப்பும் நாடு என்ற இந்தியாவின் நிலையை இன்னும் வலுப்படுத்தவும் EHL-ன் VET கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த பணியாளர்கள் பற்றாக்குறையால் இத்துறை சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. பாரம்பரிய விருந்தோம்பல் கல்வி மாதிரியில் தகவல்தொடர்பு, தலைமைத்துவப் பண்பு, மாறுபட்ட சிந்தனை, கலாச்சார அறிவுத்திறன், நெகிழ்வுத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற மென்திறன்களில் பயிற்சி குறைவாகவே இருந்தது.

தமிழ்நாடு, குறிப்பாக சென்னை மாநகரம், உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு மிகப்பெரிய சாத்தியத்திறனைக் கொண்டிருப்பதோடு, விருந்தோம்பல் துறையில் வேலைவாய்ப்பையும் வழங்கக்கூடியதாக இருப்பதால் திறனுள்ள பணியாளர்களின் தேவை மற்றும் வழங்கலுக்கு இடையிலான இடைவெளியை நிரப்புவதை அவசியமானதாக நாங்கள் கருதினோம். உலகத்தரத்தில் தொழில்முறை பயிற்சியை வழங்கி திறன்மிக்கப் பணியாளர்களை உருவாக்குவதன் அவசியமே இத்திட்டத்திற்கு வழிவகுத்திருக்கிறது,” என்று கூறினார்.