1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (10:52 IST)

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.! வழக்கறிஞரை தாக்கிய உதவி ஆய்வாளரை கண்டித்து போராட்டம்..!!

police station
கடலூர் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில், வழக்கறிஞரை காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கியதாக கூறி,  சக வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
 
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அருகே உள்ள வடக்கு சேப்பலாநத்தம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் நெய்வேலி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய வருகிறார்.
 
இவர் அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் அஸ்வதி என்பவரை கடந்த 08/02/24 அன்று பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் அஸ்வதியின் பெற்றோர் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் மீது புகார் கொடுத்த நிலையில் புகாரின் அடிப்படையில் மந்தாரக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமேகலை வழக்கறிஞர் சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்ததாக கூறப்படுகிறது.
 
இதை அடுத்து வழக்கறிஞர் சதீஷ்குமார் அஸ்வதி மற்றும் சதீஷ்குமாரின் நண்பர்களான மாற்று சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் தமிழரசன், வழக்கறிஞர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்திற்கு வந்தனர்.
 
பெண்ணின் பெற்றோருக்கு சாதகமாக காவல் உதவி ஆய்வாளர் மணிமேகலை செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பெண்ணின் பெற்றோர் ஜாதி பெயரை கூறி வழக்கறிஞர் சதீஷ்குமாரின் நண்பரான தமிழரசனை திட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில் வழக்கறிஞர் சதீஷ்குமாரின் நண்பர்களான வழக்கறிஞர் தமிழரசன் மற்றும் வழக்கறிஞர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உதவி ஆய்வாளர் மணிமேகலையிடம் கேட்ட பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் காவல்  உதவி ஆய்வாளர் மணிமேகலை போலீசை எதிர்த்து பேசுறியா என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழரசன் மற்றும் செந்தமிழ்ச்செல்வனை தாக்கியதாக கூறப்படும் நிலையில் அப்பொழுது அங்கு பணியில் இருந்த மற்றொரு காவலர் ஒருவரும் தமிழரசனை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
 
porattam
ஜாதிப் பெயரை கூறி ஆபாசமாக பேசிய பெண்ணின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கறிஞரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மணிமேகலை மற்றும் சக காவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி விருதாச்சலம் கடலூர் சாலையில் மந்தாரக்குப்பம் காவல் நிலையம் எதிரே வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 
பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெய்வேலி சரக காவல்துறை கண்காணிப்பாளர் சபியுல்லா மற்றும் வடலூர் காவல் ஆய்வாளர் ராஜா சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞருடன் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் விருதாச்சலம் கடலூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.