1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (15:12 IST)

ஏன் இத்தனை மூத்த வழக்கறிஞர்கள்?..! பொன்முடி வழக்கில் நீதிபதி கேள்வி..!!

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடியும், அவரது மனைவியும் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்களித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கடந்த 2017ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கடந்த மாதம் 21ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சதீஸ் சந்திர சர்மா, வழக்கில் ஏன் இத்தனை மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். பொன்முடியும், அவரது மனைவியும் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்களித்து நீதிபதி உத்தரவிட்டார்.