செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (14:38 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கைதி மனைவிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்.. நீதிமன்றம் உத்தரவு..!

chennai highcourt
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் மனைவிக்கு, நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன், உடல்நலக் குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், இதே கோரிக்கை சென்னை மாவட்ட முதன்மை செஷன் கோர்ட்டிலும் மனுதாரர் தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனுவின் மீது உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இதனை அடுத்து, ஒரே கோரிக்கையுடன் இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
 
Edited by Siva