1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (12:40 IST)

மனைவியை கடை உரிமையாளர் அபகரித்ததாக புகார்! குடி போதையில் கார்களை அடித்து நொறுக்கிய கணவர் கைது...!

மனைவியை கடை உரிமையாளர் அபகரித்ததாக கூறி, குடிபோதையில் கார்களை அடித்து உடைத்த கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 
சென்னை கொளத்தூர் ஐய்யப்பன் நகர் 200 அடி சாலையில் மீரான்  என்பவர் பழைய கார்களை வாங்கி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் சுமார் 20க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இந்நிலையில் இவரது கார் கடைக்கு வந்த மர்மநபர் ஒருவர், கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  கார்களின் கண்ணாடிகளை சரமாரியாக அடித்து உடைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் இது குறித்து ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராஜமங்கலம்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குடிபோதையில் இருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர் கொரட்டூர் சென்டர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பதும்,  இவரது மனைவி ஐஸ்வர்யா என்பவர் மேற்படி மீரான் என்பவரின்  கார்களை வாங்கி விற்கும் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

ஐஸ்வர்யாவுக்கும் பூபாலனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  ஏற்கனவே பூபாலன் ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கொரட்டூர் காவல் நிலையத்தில் இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பூபாலன்  முழு குடிபோதையில் தனது மனைவி வேலை செய்யும் இடத்திற்கு சென்று கார் கண்ணாடிகளை அடித்து உடைத்தது தெரிய வந்தது. அவரிடம் ராஜமங்கலம் போலீசார் விசாரணை செய்ததில் எனது மனைவி ஐஸ்வர்யாவை மேற்படி கார்களை வாங்கி விற்கும் கடை வைத்துள்ள மீரான் என்பவர் அபகரித்துக் கொண்டதாக தெரிவித்தார்.

அதனால் ஆத்திரத்தில் கார் கண்ணாடிகளை அடித்து உடைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து ராஜமங்கலம் போலீசார் பூபாலன் மீது வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.