1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (11:39 IST)

விஷம் குடித்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் மரணம்! – கோவையில் உறவினர்கள் போராட்டம்!

பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவை ஜோதிடர் பிரசன்னா விஷம் குடித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை செல்வபுரத்தை சேர்ந்த அருள்வாக்கு ஜோதிடர் பிரசன்னா. இவர் அப்பகுதியில் குபேரீஸ்வரர் அருள்வாக்கு மடத்தை நடத்தி வருகிறார். பிரசன்னா இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் அணியின் தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் சில ஆண்டுகள் முன்னதாக சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்த கருப்பையா என்பவர் நில பிரச்சினைக்காக பூஜை செய்வதற்காக பிரசன்னாவை தொடர்பு கொண்டுள்ளார். அவரிடமிருந்து பிரசன்னா பல்வேறு பூஜைகள் செய்ய வேண்டும் என சொல்லி அடிக்கடி பணம் பெற்று சுமார் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்ததாக கருப்பையா புகார் அளித்துள்ளார். இதன்பேரில் பிரசன்னா மற்றும் அவரது மனைவி, உறவினர்கள் மீது போலீஸார் வழக்கு தொடர்ந்தனர்.

இதனால் விரக்தியடைந்த பிரசன்னா தான் எந்த தவறும் செய்யவில்லை என்று வீடியோ வெளியிட்டதுடன், அதிலேயே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதையும் பதிவு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரசன்னாவின் மனைவி, தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும் விஷம் குடித்த நிலையில் பிரசன்னாவின் தாயார் உயிரிழந்தார். மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜோதிடர் பிரசன்னா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதை தொடர்ந்து அவரது உடலை வாங்காமல் அவரது உறவினர் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு விரைந்த போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.