1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (19:05 IST)

கொங்குநாடு அலப்பறைகள்: தனிநாடு கேட்கவில்லை தனி மாநிலம்தான் கேட்கின்றோம்!

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின்  மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு மாநிலம் 12 மாவட்டமாக இருந்தது,  தற்போது 38 மாவட்டமாக பிரிந்துள்ளது.  34 அமைச்சர்கள் தற்போது இருக்கின்றனர் என தெரிவித்தார். 
 
வரிவருவாய் அதிகம் கொடுத்தாலும் கொங்குநாடு பகுதியில் விகிதாச்சார அடிப்படையில் எதுவும் நடக்கவில்லை என கூறிய அவர், தமிழகத்தில் வரி வருவாய் 66 சதவீதம் கொங்குநாட்டின் 11 மாவட்டங்களில் இருந்துதான்  அரசுக்கு செல்கின்றது என தெரிவித்தார். அரசு வருவாயை மட்டும் பெற்றுக்கொண்டு இந்த  பகுதிகளுக்கு எதுவும்  செய்ய வில்லை எனவும் குற்றம் சாட்டினார். நிர்வாக வசதிக்காக கொங்கு பகுதியை தனி மாநிலமாக பிரித்தால் இப்பகுதி மேலும் வளர்ச்சி பெறும்.
 
1976 ல் இருத்து இந்த கோரிக்கை முன்வைத்து வருகின்றோம். கொங்குநாடு என்ற பகுதி முன்னுக்கு வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். கொங்குநாடு என்பது கவுண்டர் சமுதாயத்திற்கு மட்டுமானதல்ல, என்று கூறிய அவர் இது  கொங்கு பகுதியில் வாழும் அனைவருக்குமானது என தெரிவித்தார்.  இது பிரிவினையாகாது எனவுன் தெரிவித்தார். நாங்கள் தனிநாடு கேட்கவில்லை என்றும் தனி மாநிலம்தான் கேட்கின்றோம் எனவும் தெரிவித்தார். 
 
வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீடு தவறு என தெரிவித்த அவர், இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், வன்னியர்களுக்கு வடக்கு தமிழகம் கொடுக்க வேண்டும் என ராமதாஸ்  கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கும் அதிமுகவிற்கும் இதற்கும் சம்மந்தமில்லை என தெரிவித்தார். 
 
கொங்குநாடு விவகாரத்திற்கு அதிமுக கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எதிர்ப்பு கூறியிருப்பது முனுசாமியின் கருத்தாக இருக்கலாம் என  தெரிவித்தார். அனைத்து சமூகத்தினரையும் ஒன்று சேர்த்து கொங்குநாடு கோரிக்கையினை வலுப்படுத்துவோம் என தெரிவித்த அவர், கொங்கு நாடு கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருக்கின்றோம் எனவும் பிரதமரை விரைவில் சந்திக்க இருக்கின்றோம் என தெரிவித்தார்.