1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Corporation plans to develop amma unavagam

அப்டேட் ஆகும் அம்மா உணவகம்: குறைந்த விலையில் டீ, காபியும் விற்க திட்டம்!

Chennai
அம்மா உணவகம்
நஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகங்களை மேம்படுத்தி லாபகரமானதாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் உணவு பெறுவதற்காக தமிழக அரசால் “அம்மா உணவகம்” ஏற்படுத்தப்பட்டது. முதலில் சென்னையில் தொடங்கி பிறகு தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.

சமீப காலமாக அம்மா உணவகங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு மட்டும் 600 கோடிகளுக்கும் மேல் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் 184 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்கு அதிலிருந்து வருமானம் கிடைத்துள்ளது.

சென்னையில் 407 அம்மா உணவகங்கள் உள்ளன. இவற்றை மேம்படுத்தி லாபகரமானதாக நடத்த நிதி தேவைப்படுவதால் நிதி திரட்ட சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி அம்மா உணவகங்களுக்கு ஒரு அறக்கட்டளையை நிறுவி நிதி சேகரிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அம்மா உணவகங்களுக்கு தனித்தனியாக சமைக்காமல் ஒரே இடத்தில் சமைத்து அனுப்பி வைக்கவும், உணவகங்களில் டீ, காபி, பால் போன்றவற்றை விற்பனை செய்யவும், உணவகங்களில் விளம்பர பலகைகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ரூ.4,000-த்துக்கு ஸ்மார்ட்போன்: கேப் விட்டு களமிறங்கிய லாவா!!