வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (16:13 IST)

500 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி: அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

கடந்த வாரம் சேலத்தில் கெட்டுப்போன ஆட்டிறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அதே போல சென்னையிலும் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை அருகே கேட்பாரற்று ஒரு வாகனம் நின்று கொண்டிருந்திருக்கிறது. அதிலிருந்து பயங்கர துர்நாற்றம் வீசவே இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அதை தொடர்ந்து சிந்தாதிரிப்பேட்டை விரைந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்த போது அந்த வாகனத்தில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி இருந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது ஒரு கறிக்கடையில் கெட்டுப்போன ஆட்டிறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. வாகனத்திலும், கறிக்கடையிலுமாக மொத்தம் 500 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இதேபோல சேலம் பகுதியில் கறிக்கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடரும் இந்த சம்பவங்கள் அசைவ பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.