1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (12:25 IST)

சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு – மாநகராட்சி அறிவிப்பு!

கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களும் வேலையின்றி வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசு வழங்கிவருகிறது. சேலம், திருவாரூர் மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் ஆதரவற்றவர்களுக்கு இலவச உணவு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது சென்னையிலும் ஆதரவற்றவர்கள், முதியவர்கள் உணவு தேவைக்காக அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் ”தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்பட்டும். இலவச உணவு உண்ண வருபவர்கள் தங்கள் பெயர் விவரங்களை கொடுத்து விட்டு உணவு உண்டு செல்லலாம்.” என தெரிவித்துள்ளார்.