1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஜூலை 2020 (10:27 IST)

மீண்டும் சென்னையில் கூட்ட நெரிசல்; கேள்விக்குள்ளாகிறதா சமூக இடைவெளி!

கடந்த சில நாட்களாக சென்னையில் முழுமுடக்கம் அமலில் இருந்த நிலையில் இன்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுகள் 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகியவற்றில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து பகுதிகளும் மூடப்பட்டன.

இதனால் கடந்த சில வாரங்களாக சென்னை வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் சென்னையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் கூடவே இன்ன பிற கடைகளையும் மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சென்னையில் போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நீண்ட காலம் கழித்து மக்கள் வெளியே செல்ல தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பல இடங்களில் போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசலால் சமூக இடைவெளியே கேள்விக்கு உள்ளாவதாக சமூக ஆர்வலர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக முழுமுடக்கம் அமலில் இருந்ததால் கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் மக்களிடையே உள்ள விழிப்புணர்வின்மையால் மீண்டும் பாதிப்பு தலை தூக்கி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறதாம்.