1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 10 ஜனவரி 2024 (14:34 IST)

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்..

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் பூமத்தியரேகையை  ஒட்டிய  இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில்,  இலங்கைக்கு  தெற்கே,  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
நாளையும் நாளை மறுநாளும், தமிழகத்தில்  ஓரிரு    இடங்களிலும்,    புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 13-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மீனவர்களுக்கான எச்சரிக்கை:  
 
10.01.2024 மற்றும் 11.01.2024: தமிழக   கடலோரப்பகுதிகள்,    மன்னார்    வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
12.01.2024: குமரிக்கடல் பகுதிகள்,  மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்  பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.