1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (14:33 IST)

சென்னை மெரினாவில் 2000 போலீஸார் குவிப்பு

காவிரி விவகாரத்திற்காக மெரினாவில் போராட்டம் நடைபெறப்போவதாக வந்த தகவலின் பேரில், சென்னை மெரினாவில் 2000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. 
 
ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. 
 
இந்த வழக்கு கடந்த 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, வரைவு திட்ட அறிக்கையை மே 3 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று தென்இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார். 
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளதால் அய்யாக்கண்ணுவிற்கு மெரினாவில் ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில், தமிழக அரசு மெரினாவில் போராட்டம் நடத்த நீதிமன்றத்தில் ஸ்டே ஆடர் வாங்கியது.

இந்நிலையில் விடுமுறை தினமான இன்று காவிரிக்காக, தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் சென்னை மெரினாவில் போராட்டம் நடைபெறப்போவதாக தகவல் வெளியானதையடுத்து, மெரினாவில் 2000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினாவை சுற்றுயுள்ள ரயில்நிலையங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி மெரினா வழியாக செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.