1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (17:04 IST)

கரும்பு விவசாயிகள் கைது- தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

சென்னை தலைமைச் செயலகம் நோக்கி  பேரணியாகச் செல்ல முயன்ற 500க்கும் அதிகமான விவசாயிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரும்பு கொள்முதலில் டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சென்னை எழும்பூர் ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர்.
அப்போது, போலீஸார் அவர்களைக் கைது செய்து ஒரு மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
விவசாயிகள் கைதுக்கு, நடிகர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து,  அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  ‘’உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதை கணக்கில் கொண்டு கரும்பு 1 டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்ததை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒரு ஒட்டுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் கொடுக்கும் ஆளும்கட்சியினர், விவசாயிகளின் குறையை தீர்க்காமல் அவர்களை வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்?.

விவசாயிகள் நல்லா இருந்தால் தான் இந்த நாடு நல்லா இருக்கும். எனவே, கரும்பு விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ரூ. 5 ஆயிரத்தை உடனடியாக வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.